கலி விருத்தம்

3573. ஆசை சுமந்த நெடுங் கரி அன்னார்
பாசிலை துன்று வனம் பல பின்னா,
காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார்;
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார்.

    ஆசை சுமந்த நெடுங்கரி அன்னார் - திசைகளைத் தாங்குகிற
பெரிய திசை யானைகளை ஒத்தவர்களாகிய இராமலக்குவர்; பாசிலை
துன்று வனம் பல பின்னா -
பசிய இலைகள் நெருங்கிய காடுகள் பல
பின்னாக (நடந்து சென்று); காசு அறு குன்றினோடு - குற்றம் இல்லாத
மலைகளையும்; ஆறு கடந்தார் - ஆறுகளையும் கடந்தவர்களாகி;
ஒன்பதொடு ஒன்பது யோசனை சென்றார் - பதினெட்டு யோசனை
(தூரம்) சென்றார்கள்.

     இராமலக்குவர் நடந்து சென்று பதினெட்டு யோசனை தூரம்கடந்தனர்
என்க. ஆசை - திசை. துன்றுதல் - நெருங்குதல்; காசு - குற்றம்.அன்னார்-
குறிப்பு வினையாலணையும் பெயர். பாசிலை - பண்புத்தொகை. கடந்தார் -
முற்றெச்சம்.                                                  33