3574. | மண்படி செய்த தவத்தினில் வந்த கள் படி கோதையை நாடினர், காணார், உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க, புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார். |
மண்படி செய்த தவத்தினில் - (அவர்கள்) மண்ணுலகு செய்த தவத்தினால்; வந்த - (அதனிடமிருந்து) வந்த; கள் படி கோதையை - தேன் பொருந்திய மாலையை அணிந்த சீதையை; நாடினர் காணார் - தேடிக் காணாதவர்களாகி; உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க - மனத்தில் படிந்திருந்த சினம் பெருமூச்சோடு (பொங்கி) வெளிப்பட; புள் படியும் குளிர் வார் பொழில் - பறவைகள் தங்குகிற குளிர் (மிகுந்த) பெரிய சோலையின் கண்; புக்கார் - புகுந்தார்கள். இராமலக்குவர் சீதையைத் தேடிக் காணாமல் சினமும் பெருமூச்சும் வெளிப்பட ஒரு சோலைக் கண் சென்று தங்கினர் என்பதாம். மண் படி - மண்ணுலகு. வார் - நீண்ட, பெரிய. காணார் - முற்றெச்சம். 34 |