3575. ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்;
நாரியை எங்கணும் நாடினன்; நாடி,
பேர் உலகு எங்கும் உழன்று, இருள் பின்னா,
மேருவின் - வெங் கதிர் - மீள மறைந்தான்.

    வெங்கதிர் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்; ஆரியர்
சிந்தை அலக்கண் அறிந்தான் -
வீரர்களாகிய (அந்த) இராமலக்குவரது
மனத் துன்பத்தை அறிந்து; நாரியை எங்கணும் நாடினன் நாடி -
பெண்ணாகிய சீதையை எங்கும் (துருவித்) தேடிப் பார்த்து; பேர்உலகு
எங்கும் உழன்று -
(இந்தப்) பெரிய நிலவுலகு முழுவதும் அலைந்து
திரிந்து; மேருவின் மீள இருள் பின்னா மறைந்தான் - மேரு மலையில்
மறுபடியும் தனக்குப் பின் இருள் தொடரும் படி சென்று மறைந்தான்.

     உலகம் முழுதும் சீதையை தேடி அலுத்த கதிரவன் உலகுக்கு
அப்புறம் போயும் தேடுவான் போலத் தனக்குப் பின் இருள் தொடருமாறு
மேரு மலையில் மறைந்தான். ஆரியர் - வீரர், அறிவுடையவர், பெரியோர்
எனினுமாம். அலக்கண் - துன்பம், நாரி - பெண்; ஈண்டுச் சீதை. அறிந்தான்
- முற்றெச்சம். வெங்கதிர் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை.                                         35