3576. | அரண்டு, அருகும் செறி அஞ்சன புஞ்சம் முரண்டனபோல், இருள் எங்கணும் முந்த, தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி, இருண்டன, மாதிரம் எட்டும் இரண்டும். |
செறி அஞ்சன புஞ்சம் - அடர்ந்த மையின் திரட்சி; அரண்டு - அஞ்சி; அருகும் முரண்டன போல் - (இரு) பக்கங்களிலும் வளைத்துக் கொண்டன போல; எங்கணும் இருள் முந்த - எல்லாப் பக்கங்களிலும் இருள் சூழ; தெருண்ட அறிவில்லவர் - தெளிவில்லாத அறிவில்லாதவர்களுடைய; சிந்தையின் - மனத்தினைப் போல; மாதிரம் எட்டும் இரண்டும் - திசைகள் பத்தினையும்; முந்தி இருண்டன - விரைந்து இருளுமாறு செய்தன. தெளிவில்லாத மனத்தவர் மனம் போல பத்துத் திசைகளையும் இருள் வளைத்துக் கொண்டது என்றபடி. அரண்டு + அருகும் = அரண்டருகும்; அரண் தருகும் எனப் பிரித்து, காவல் தரும் எனவும் பொருள் கொள்ளலாம். குஞ்சம் - திரட்சி. மாதிரம் - திசை. திசைகள் பத்தாவன - பெருந்திசை நான்கு, கோண திசை நான்கு. மேல், கீழ்த் திசை இரண்டு ஆகப்பத்தென்க. 36 |