3577.இளிக்கு அறை இன் சொல்
     இயைந்தன, பூவை,
கிளிக்கு அறையும் பொழில்,
     கிஞ்சுக வேலி,
ஒளிக்கறை மண்டிலம் ஒத்துளது,
     ஆங்கு ஒர்
பளிக்கு அறை; கண்டு;
     அதில் வைகல் பயின்றார்.

    இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை - இளி என்னும்
இசைக்கு (ஒப்பு என்று) கூறப்பட்ட இனிய சொற்களை உடையனவாகிய
நாகண வாய்ப்புட்கள்; கிளிக்கு அறையும் பொழில் - (அந்த இனிமையான
சொற்களைக்) கிளிகளுக்குச் சொல்லித் தரும் சோலையில்; கிஞ்சுக வேலி -
முள் முருக்க மரங்களை வேலியாக உடைய; ஒளிக் கறை மண்டிலம்
ஒத்துளது -
ஒளியும் முயற்கறையும் உடைய (சந்திர) மண்டலத்தை
ஒத்துள்ளதாகிய; ஒர் பளிக்கு அறை கண்டு - ஒரு பளிங்குப் பாறையைக்
கண்டு; ஆங்கு அதில் வைகல் பயின்றார் - அவ்விடத்து அப்பாறையில்
தங்கினார்கள்.

     சோலையைச் சேர்ந்த இராமலக்குவர் அங்குள்ள பளிங்குப் பாறையில்
தங்கினார்கள். இளி - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
என்ற ஏழிசைகளில் ஒன்று. பூவை - நாகண வாய்ப்புள், மைனா. கிஞ்சுகம் -
முள் முருங்கை. ஒளிக் கறை - ஒளியும் கறையும் உடன் கூறினமையால்
சந்திர மண்டிலம் என்க. பளிக்கறை - பளிங்கினாலாகிய அறை; அறை -
பாறை.                                                    37