இலக்குவன் நீர் தேடிச் செல்லல் 3578. | அவ் இடை எய்திய அண்ணல் இராமன் வெவ் விடைபோல் இள வீரனை, 'வீர! இவ் இடை நாடினை, நீர் கொணர்க' என்றான்; தெவ் இடை வில்லவனும் தனி சென்றான். |
அவ் இடை எய்திய - அந்த இடத்திற்குச் சென்று தங்கிய; அண்ணல் இராமன் - தலைவனாகிய இராமன்; வெவ் விடைபோல் இளவீரனை - வலிமையுள்ள காளை போன்ற இளைய வீரனாகிய இலக்குவனைப் (பார்த்து); வீர - வீரனே; இவ் இடை நீர் நாடினை கொணர்க - இவ்விடத்தில் தண்ணீரைத் தேடிக் கொண்டு வருவாய்; என்றான் - என்று கூறினான்; தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் - (அது கேட்ட) பகைவர் பின்னிடக் காரணமாகிய வில்லை உடைய இலக்குவனும் தனியே (இராமனைப் பிரிந்து) போனான். சீதையைப் பிரிந்து இராமன் மாயமானின் பின் சென்றது போல இராமனுக்கு நீர் கொண்டுவர அவனைப் பிரிந்து இலக்குவன் தனியே சென்றான் என்க. இடை - இடம். விடை, வலிமை நடை, செருக்கு ஆகியவற்றால் இலக்குவனுக்கு உவமை. தெவ் - பகை. நாடினை - முற்றெச்சம், கொணர்க - வியங்கோள் வினைமுற்று. தெவ் - பண்பாகு பெயர். 38 |