இலக்குவனைக் கண்டு அயோமுகி காமுறல் 3579. | எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்; சிங்கம் எனத் தமியன் திரிவானை, அங்கு, அவ் வனத்துள், அயோமுகி என்னும் வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள். |
நீர் எங்கணும் நாடினன் இடை காணான் - தண்ணீரை எல்லாவிடத்திலும் தேடி அவ்விடத்தில் காணாதவனாகி; சிங்கம் எனத் தமியன் திரிவானை - சிங்கம் போலத் தனியாகத் திரிகின்றவனாகிய இலக்குவனை; அங்கு அவ்வனத்துள் - அப்பொழுது அந்தக் காட்டில் (உள்ள); அயோமுகி என்னும் - அயோமுகி என்ற பெயர் கொண்ட; வெங்கண் அரக்கி - கொடிய கண்களை உடைய அரக்கியாகியவள்; விரும்பினள் கண்டாள் - ஆசை கொண்டு பார்த்தாள். காட்டில் தனியே நீர் தேடிச் சென்ற இலக்குவனை அயோமுகி ஆசை கொண்டு பார்த்தாள். அயோமுகி - இரும்பு போன்ற முகம் உடையவள். காணான், விரும்பினள் - முற்றெச்சங்கள். திரிவானை - வினையாலணையும் பெயர். வெங்கண் - பண்புத் தொகை. 39 |