3580. | நல் மதியோர் புகல் மந்திர நாமச் சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள் தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்; 'மன்மதன் ஆம் இவன்' என்னும் மனத்தாள். |
நல் மதியோர் புகல் - நல்ல அறிவுடையவர்கள் சொல்லுகிற; நாம மந்திரச் சொல் - அச்சம் தருகிற மந்திரச் சொற்களை; மதியா - மதித்துக் கட்டுப்படாத; அரவின் - பாம்பினைப் போல; சுடர்கிற்பாள் - சினச் சுடர் மிக்கவள்; 'இவன் மன்மதன் ஆம்' - 'இவன் (இலக்குவன்) மன்மதனே ஆனவன்'; என்னும் மனத்தாள் - என்னும் எண்ணத்தால்; தன் மதனோடு - தன் மனச் செருக்கோடு; தன் வெம்மை தணிந்தாள் - தன் கொடுமையும் தணிந்தவளானாள். மந்திரம் கேட்டுக் கட்டுப்படாத பாம்பு போன்றவளாகிய அயோமுகி இலக்குவனிடம் கொண்ட காதலால் தன் மனச் செருக்கும் வலிமையும் தணியப் பெற்றாள் என்க. நாமம் - அச்சம். மதன் - வலி, செருக்கு, வெம்மை - சினம். மதியா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 40 |