3581. | அழுந்திய சிந்தை அரக்கி, அலக்கண் எழுந்து உயர் காதலின் வந்து, எதிர் நின்றாள்; 'புழுங்கும் என் நோவொடு புல்லுவென்; அன்றி, விழுங்குவெனோ' என விம்மல் உழந்தாள். |
அழுந்திய சிந்தை அரக்கி - இலக்குவன் மீது (ஆழமாக) அழுந்திய (அன்பு கொண்ட) மனத்தை உடைய அரக்கியாகிய அயோமுகி; அலக்கண் எழுந்து உயர் காதலின் - துன்பம் மிக எழுவதற்குக் காரணமான மிகுதியான ஆசையோடு; எதிர் வந்து நின்றாள் - (இலக்குவனுக்கு) எதிரே வந்து நின்று; 'புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி - மனம் (மாறுபட்டு) அழிவதற்குக் காரணமான ஆசையாகிய நோயினால், (அவ்விலக்குவனைத்) தழுவுவேனேயன்றி; விழுங்குவெனோ - (அவனைக்) கொன்று தின்பேனோ (தின்ன மாட்டேன்); என விம்மல் உழந்தாள் - என்று ஏக்கம் (மிகக்) கொண்டு வருந்தினாள். இலக்குவன் மீது காதல் கொண்ட அயோமுகி, நான் அவனைத் தழுவுவேனேயன்றிக் கொன்று தின்ன மாட்டேன்' என்றாள் என்க. அலக்கண் - துன்பம். புழுங்குதல் - எண்ணி மனம் அழிதல். நின்றாள் - முற்றெச்சம். புல்லுவென் - தன்மை ஒருமை வினைமுற்று. விழுங்குவனோ - ஓகாரம் எதிர்மறை. 41 |