3582. | 'இரந்தனென் எய்திய போது, இசையாது கரந்தனனேல், நனி கொண்டு கடந்து, என் முரஞ்சினில் மேவி முயங்குவென்' என்று, விரைந்து எதிர் வந்தனள், தீயினும் வெய்யாள்!. |
தீயினும் வெய்யாள் - தீயினைக் காட்டிலும் கொடியவள் ஆகிய அயோமுகி; இரந்தனென் எய்திய போது - (நான் இவனை) வேண்டி நெருங்கும் போது; இசையாது நனிகரந்தனனேல் - (என் விருப்பத்துக்கு) இசையாமல் முழுதும் மறுத்து விடுவானாகில்; கொண்டு கடந்து - (அவனை) எடுத்துக் கொண்டு கடந்து சென்று; என் முரஞ்சினில் மேவி - எனது குகைக்குக் கொண்டு சென்று; முயங்குவென் என்று - (அவனை) வலியத் தழுவுவேன் என்று சொல்லி; எதிர் விரைந்து வந்தனள் - (இலக்குவனுக்கு) எதிராக விரைந்து வந்தாள். என் ஆசைக்கு இணங்கா விட்டால் நான் அவனை வலியத் தூக்கிச் சென்று என் குகையில் வைத்து வலியத் தழுவுவேன்' என்று அயோமுகி எண்ணினாள். முரஞ்சு - பாறை, இங்கு மலை முழைஞ்சாகிய பாறையைச் சுட்டியது. ஆகு பெயர். இரந்தனன் - முற்றெச்சம். 42 |