3591. | 'பாவியர் ஆம் இவர்; பண்பு இலர்; நம்பால் மேவிய காரணம் வேறு இலை' என்பான்; 'மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்! யாவள் அடீ? உரைசெய், கடிது' என்றான். |
பண்பு இலர் - நற்பண்புகள் இல்லாதவரும்; பாவியர் ஆம் இவர் - பாவியர்களும் ஆகிய இவர்கள்; நம்பால் - நம்மிடம்; மேவிய காரணம் வேறு இலை - வருவதற்கு உரிய காரணம் வேறு ஒன்றும் இல்லை; என்பான் - என்று நினைத்தவனாகிய (இலக்குவன்); மா இயல் கானின் - விலங்குகள் திரிகின்ற காட்டின்கண்; வயங்கு இருள் வந்தாய் - மிக்க இருளில் வந்தவளாகிய (நீ); யாவள் அடீ - யாரடி; உரை செய்கடிது - விடையை விரைவாகச் சொல்; என்றான் - என்று கேட்டான். நற்குணமில்லாத கொடியவர்களாகிய அரக்கியர் நம்மிடம் வருவதற்கு வேறு காரணம் இல்லை என்றது பாவம் செய்தலாகிய ஒரு காரணம் உள்ளது எனக் கருதியதாகும். வந்தாய் - முன்னிலை ஒருமை வினையாலணையும் பெயர்; 'வந்தவளே' என விளியாகவும் கொள்ளலாம். 51 |