அயோமுகியின் காம வெறியும் இலக்குவன் மறுப்பும்

3592.பேசினன்; அங்கு அவள்
     பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி
     சிந்தையளும்தான்,
'நேசம் இல்,
     அன்பினளாயினும், நின்பால்
ஆசையின் வந்த
     அயோமுகி' என்றாள்.

    பேசினன் - (மேலே குறிப்பிட்டவாறு இலக்குவன்) பேசினான்; அங்கு-
அப்பொழுது; ஊசல் உழன்று அழி சிந்தையளும் தான் அவள் -
ஊசலாடி வருந்தி அழிகின்ற மனத்தை உடையவளாகிய அயோமுகியும்
தான்; பேசுற நாணாள் - தன் ஆசையை ஆண்மகனிடம் தானே எடுத்துச்
சொல்ல நாணமடையாதவளாய்; நேசம் இல் அன்பினளாயினும் - பழைய
உறவு இல்லாத அன்பு உடையவள் ஆயினும்; நின்பால் - நின்னிடம்;
ஆசையின் வந்த அயோமுகி - ஆசையால் வந்த அயோமுகி என்ற
பெயர் உடையவள்; என்றாள் - என்று கூறினாள்.

     ஊசல் உழன்று அழி சிந்தையள் இலக்குவன் தன்னை ஏற்பானோ
மாட்டானோ என்று தடுமாறும் உள்ளம் கொண்டவள். பேசுற நாணாள் -
தாமுறு காமத் தன்மை தாங்களே ஆடவனிடம் உரைக்க நாணாதவள்.
மூன்றாவது அடிக்கு வேறு பாடங்களும் உள; எனினும், நாம் கொண்ட
பாடம் உட்பட எதற்கும் முற்றும் பொருந்துறப் பொருள் கொள்ள
இயலவில்லை. ஏடேழுதியோர் பிழையோ, பொருள் கொள்ள நம்பால் உள்ள
குறையோ - தெரியவில்லை. தான் - அசையாகவும் கொள்ளலாம்.       52