3593.பின்னும் உரைப்பவள், 'பேர்
     எழில் வீரா!
முன்னம் ஒருத்தர் தொடா
     முலையோடு உன்
பொன்னின் மணித் தட மார்பு
     புணர்ந்து, என்
இன் உயிரைக் கடிது
     ஈகுதி' என்றாள்.

    பின்னும் உரைப்பவள் - மேலும் தொடர்ந்து கூறுபவளாகிய
(அயோமுகி); 'பேர் எழில் வீரா - பேரழகுடைய வீரனே; முன்னம்
ஒருத்தர் தொடா முலையோடு -
இதற்கு முன்பு ஒருவரும் தொடாத
முலையோடு (கன்னி என்றபடி); உன் பொன்னின் மணித்தட மார்பு
புணர்ந்து -
உன்னுடைய பொன் போன்ற அழகிய பெரிய மார்பைத் தழுவி;
என் இன் உயிரைக் கடிது ஈகுதி - அதனால் எனது இனிமையான, உயிர்
(போகாது இருக்க) விரைவாக அருள் ஈவாய்; என்றாள் - என்று கூறினாள்.

     'நான் பிறரோடு புணர்ந்தவளல்லள், உன்னை மட்டும் விரும்புபவள்.
எனவே என்னைப் புணர்ந்து என் இன்னுயிர் ஈவாய்' என்றாள். ஈகுதி -
இழிந்தோள் கூற்றாக வந்தது. உரைப்பவள் - முற்றெச்சம், தொடா -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தடமார்பு - உரிச் சொல் தொடர்.
ஈகுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று.                          53