3593. | பின்னும் உரைப்பவள், 'பேர் எழில் வீரா! முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன் பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து, என் இன் உயிரைக் கடிது ஈகுதி' என்றாள். |
பின்னும் உரைப்பவள் - மேலும் தொடர்ந்து கூறுபவளாகிய (அயோமுகி); 'பேர் எழில் வீரா - பேரழகுடைய வீரனே; முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு - இதற்கு முன்பு ஒருவரும் தொடாத முலையோடு (கன்னி என்றபடி); உன் பொன்னின் மணித்தட மார்பு புணர்ந்து - உன்னுடைய பொன் போன்ற அழகிய பெரிய மார்பைத் தழுவி; என் இன் உயிரைக் கடிது ஈகுதி - அதனால் எனது இனிமையான, உயிர் (போகாது இருக்க) விரைவாக அருள் ஈவாய்; என்றாள் - என்று கூறினாள். 'நான் பிறரோடு புணர்ந்தவளல்லள், உன்னை மட்டும் விரும்புபவள். எனவே என்னைப் புணர்ந்து என் இன்னுயிர் ஈவாய்' என்றாள். ஈகுதி - இழிந்தோள் கூற்றாக வந்தது. உரைப்பவள் - முற்றெச்சம், தொடா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தடமார்பு - உரிச் சொல் தொடர். ஈகுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று. 53 |