3594. | ஆறிய சிந்தையள் அஃது உரைசெய்ய, சீறிய கோளரி கண்கள் சிவந்தான்; 'மாறு இல வார் கணை, இவ் உரை வாயின் கூறிடின், நின் உடல் கூறிடும்' என்றான். |
ஆறிய சிந்தையள் - (இலக்குவன் மீது கொண்ட காதலால்) கொடுமை குறைந்த மனம் உடையவளாகிய (அயோமுகி); அஃது உரை செய்ய - அந்தச் சொற்களைச் சொல்ல; சீறிய கோளரி - சினம் கொண்ட சிங்கம் போன்ற இலக்குவன்; கண்கள் சிவந்தான் - சினத்தால் கண்கள் சிவந்து; 'இவ்வுரை வாயின் கூறிடின் - இப்படிப்பட்ட சொற்களை (நீ மீண்டும்) வாயினால் கூறினால்; மாறு இலவார் கணை - (எனது) ஒப்பு இல்லாத நீண்ட அம்புகள்; நின் உடல் கூறிடும் - உனது உடலைத் துண்டு துண்டாக்கி விடும்'; என்றான் - என்று கூறினான். நீ மீண்டும் இவ்வாறு கூறினால் என் அம்பு உன் உடலைக் கூறிடும் என்றவாறு. கோளரி - உவமையாகு பெயர். கோளரி சிவந்தான் - திணை வழுவமைதி. பாடலின் இறுதி வரியில் உள்ள சொல் நயம் காண்க. 54 |