3595. மற்று அவன் அவ் உரை
     செப்ப, மனத்தால்
செற்றிலள்; கைத் துணை
     சென்னியில் வைத்தாள்;
'கொற்றவ! நீ எனை வந்து
        
     உயிர் கொள்ளப்
பெற்றிடின், இன்று
     பிறந்தனென்' என்றாள்.

    அவன் மற்று அவ் உரை செப்ப - அந்த இலக்குவன் மாறுபாடாக
இந்தச் சொற்களைச் சொல்ல; மனத்தால் செற்றிலள் - மனத்தால் சினம்
கொள்ளாதவளாகிய (அயோமுகி); கைத் துணை சென்னியில் வைத்தாள் -
தன் இரண்டு கைகளையும் தலைமீது குவித்தவளாய்; 'கொற்றவ -
தலைவனே; நீ எனை வந்து - நீ என்னிடம் வந்து; உயிர் கொள்ளப்
பெற்றிடின் -
(நான்) உயிர் பெற்று வாழும்படி செய்யப் பெற்றால்; இன்று
பிறந்தனென் -
இன்று நான் (மீண்டும்) பிறந்ததன் பயனைப்
பெற்றவளாவேன்'; என்றாள் - என்று கூறினாள்.

     இலக்குவன் கூறியதைக் கேட்ட அயோமுகி சினம் கொள்ளாது
அவனைக் கை கூப்பி வணங்கி 'நீ எனக்கு அருள் செய்யின் நான் பிறந்த
பயனைப் பெற்றவள் ஆவேன்' என்றாள்.                          55