3595. | மற்று அவன் அவ் உரை செப்ப, மனத்தால் செற்றிலள்; கைத் துணை சென்னியில் வைத்தாள்; 'கொற்றவ! நீ எனை வந்து உயிர் கொள்ளப் பெற்றிடின், இன்று பிறந்தனென்' என்றாள். |
அவன் மற்று அவ் உரை செப்ப - அந்த இலக்குவன் மாறுபாடாக இந்தச் சொற்களைச் சொல்ல; மனத்தால் செற்றிலள் - மனத்தால் சினம் கொள்ளாதவளாகிய (அயோமுகி); கைத் துணை சென்னியில் வைத்தாள் - தன் இரண்டு கைகளையும் தலைமீது குவித்தவளாய்; 'கொற்றவ - தலைவனே; நீ எனை வந்து - நீ என்னிடம் வந்து; உயிர் கொள்ளப் பெற்றிடின் - (நான்) உயிர் பெற்று வாழும்படி செய்யப் பெற்றால்; இன்று பிறந்தனென் - இன்று நான் (மீண்டும்) பிறந்ததன் பயனைப் பெற்றவளாவேன்'; என்றாள் - என்று கூறினாள். இலக்குவன் கூறியதைக் கேட்ட அயோமுகி சினம் கொள்ளாது அவனைக் கை கூப்பி வணங்கி 'நீ எனக்கு அருள் செய்யின் நான் பிறந்த பயனைப் பெற்றவள் ஆவேன்' என்றாள். 55 |