3596. | வெங் கதம் இல்லவள் பின்னரும், 'மேலோய்! இங்கு நறும் புனல் நாடுதி என்னின், அங்கையினால் எனை, "அஞ்சலை" என்றால், கங்கையின் நீர் கொணர்வென் கடிது' என்றாள். |
வெங்கதம் இல்லவள் - கொடிய சினம் இல்லாதவளாகிய (அயோமுகி); பின்னரும் - பின்பும்; 'மேலோய் - உயர்ந்தவனே!; இங்கு நறும் புனல் நாடுதி என்னின் - இவ்விடத்தில் நல்ல நீரைத் தேடுகிறாய் என்றால்; எனை - எனக்கு; அங்கையினால் - உன்னுடைய அழகான கைகளினால்; "அஞ்சலை" என்றால் - அஞ்சாதே என்று அபயம் அளித்தால்; கடிது - விரைவாக; கங்கையின் நீர் கொணர் வென் - (உனக்காகக்) கங்கையின் நீரைக் கூடக் கொண்டு வந்து கொடுப்பேன்; என்றாள் - என்று கூறினாள். அரக்கியாதலின் சினம் கொள்ளல் இயற்கையெனினும், இலக்குவன்பால் கொண்ட காமத்தால் கதம் (சினம்) காட்டாதவளாயினாள். கதம் - சினம், அங்கை - அங்கை என்க. கடிது - விரைவு. வெங்கதம், நறும்புனல் - பண்புத் தொகைகள், கொணர்வென் - தன்மை ஒருமை வினைமுற்று. 56 |