3598.'எடுத்தனென் ஏகினென்,
     என் முழைதன்னுள்
அடைத்து, இவன் மெம்மை
     அகற்றிய பின்னை,
உடற்படுமால்; உடனே
     உறும் நன்மை;
திடத்து இதுவே நலன்'
     என்று, அயல் சென்றாள்.

    எடுத்தனென் ஏகினென் - (இந்த இலக்குவனை) எடுத்துக் கொண்டு
சென்று; என் முழை தன்னுள் அடைத்து - எனது குகையில் அடைத்து
வைத்து; இவன் வெம்மை அகற்றிய பின்னை - இவனது சினத்தைத்
தணித்த பின்பு; உடற்படுமால் - (இவன் என் எண்ணத்துக்கு)
உடன்படுவான்; உடனே நன்மை உறும் - (அதற்குப் பின்பு) விரைவாக
(இவனால்) எனக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்; இதுவே திடத்து நலன் -
இவ்வாறு செய்வதுவே உறுதியாக நன்மை தரும்; என்று - என்று எண்ணி;
அயல் சென்றாள் - (இலக்குவனது) அருகில் சென்றாள்.

     இவனை என் குகைக்கு எடுத்துச் சென்று சினத்தைத் தணித்தால்,
இவன் எனக்கு உடன்படுவான். அதுவே உறுதியாகச் செய்யத் தக்கது என்று
எண்ணிய அயோமுகி இலக்குவனுக்குப் பக்கத்தில் போனாள். முழை -
குகை, வெம்மை - வெப்பம், ஈண்டுச் சினம். திடம் - உறுதி, எடுத்தனென் -
முற்றெச்சம். ஆல் - அசை.                                     58