இலக்குவனை அயோமுகி தூக்கி்ச் செல்லல் 3599. | மோகனை என்பது முந்தி முயன்றாள்; மாக நெடுங் கிரி போலியை வவ்வா ஏகினள் - உம்பரின் இந்துவொடு ஏகும் மேகம் எனும்படி - நொய்தினின் வெய்யாள். |
வெய்யாள் - கொடியவளாகிய அயோமுகி; மோகனை என்பது - மோகத்தை உண்டாக்கும் மாயையை; முந்தி முயன்றாள் - முன்னால் முயன்று செய்து; மாக நெடுங்கிரி போலியை வவ்வா - விண்ணை அளாவிய பெரிய மலை போன்றவனாகிய இலக்குவனைத் தூக்கிக் கொண்டு; உம்பரின் - மேலே உள்ள வானத்தில்; இந்துவொடு ஏகும் மேகம் எனும்படி - நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் என்று சொல்லும் படியாக; நொய்தினின் - (மிக) விரைவாக; ஏகினள் - சென்றாள். அயோமுகி மோகனை என்ற மாய மந்திரத்தால் இலக்குவனை மயக்கி, அவனை எடுத்துக் கொண்டு, நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் போல வானத்தில் விரைந்து சென்றாள். மோகனை - மோகத்தை உண்டாக்கும் மாயை. மாகம் - வானம். இந்து - நிலவு. நொய்தினின் - எளிமையாக எனினுமாம். "நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்" (5) எனக் கம்பர் கூறியுள்ளதை எண்ணுக. இந்து - இலக்குவனுக்கும் மேகம் - அயோமுகிக்கும் உவமையாம். ஒளி அறத்துக்கும், கருமை பாவத்துக்கும் இங்கு வந்துள்ளமை காண்க. வவ்வா - செய்யா எனும் வாய்பாட்டு உடன் பாட்டு வினையெச்சம். 59 |