3600. | மந்தரம் வேலையில் வந்ததும், வானத்து இந்திரன் ஊர் பிடி என்னலும், ஆனாள்; வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச் சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள். |
மந்தரம் வேலையில் வந்ததும் - (இலக்குவனைத் தூக்கிச் சென்ற அயோமுகி) மந்தரமலை கடலில் பொருந்தியது போலவும்; வானத்து இந்திரன் ஊர்பிடி - தேவர் உலகத்தில் இந்திரன் ஏறிச் செலுத்தும் (ஐராவதம் என்ற ஆண் யானையின் துணையாகிய) அப்பிரமு என்ற பெண் யானை; என்னலும் ஆனாள் - என்று உவமை கூறத்தக்கவளாய் விளங்கினாள்; வெந்திறல் வேல் கொடு சூர் அடும் - (அதற்கு மேல் தன்) வலிமை பொருந்திய வேலைக் கொண்டு சூரபதுமனைக் கொன்ற; வீரச் சுந்தரன் ஊர்தரு தோகையும் - வீர அழகனாகிய முருகக் கடவுள் ஏறிச் செலுத்துகிற மயிலையும்; ஒத்தாள் - ஒத்து விளங்கினாள். இலக்குவனை அயோமுகி தூக்கிச் சென்ற காட்சியை இப்பாடலில் மூன்று உவமைகள் கொண்டு விளக்கினார் (1) மந்தரமலை - இலக்குவன், கடல் - மந்தர மலையைத் தாங்கிய கடல் அயோமுகி. இஃது இல் பொருள் உவமை. (2) இந்திரன்; இலக்குவன், அவன் ஊர்பிடி - அப்பிரமு: அயோமுகி. அயோமுகி பெண் என்பதால் இந்திரன் ஊரும் ஐராவதம் என்ற ஆண் யானையைக் கூறாது அதன் துணையாகிய பெண் யானையைக் கூறினார். (3) முருகன் : இலக்குவன். முருகனைத் தாங்கும் தோகை; அயோமுகி. இங்குப் பெண் மயில் கூறாது தோகையுடைய ஆண் மயிலைக் கூறியது, முருகனைச் சுமக்கும் மயிலைக் கருதியதால் என்க. இம்மூன்று உவமைக்கும், "தாங்குதல்" என்பது பொதுத் தன்மையாதலையும் அறிக. வேலை - கடல், சூர் - சூரபதுமன், சுந்தரன் - முருகன். 60 |