இலக்குவனைக் காணாத இராமன் துயரம் கலிவிருத்தம் 3603. | 'வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர் ஐது ஆதலினோ? அயல் ஒன்று உளதோ? நொய்தாய் வர, வேகமும் நொய்திலனால்; எய்தாது ஒழியான்; இது என்னைகொலாம்? |
நொய்தாய் வர - (இலக்குவன்) விரைவாய் வருவதற்கு; வேகமும் நொய்திலனால் - விரைவும் குறைவாக உடையவனல்லன்; எய்தாது ஒழியான் - வராமல் இருக்கவும் மாட்டான்; வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர் ஐது ஆதலினோ? - (அப்படி இருந்தும் அவன் வாராமைக்குக் காரணம்) வெப்பம் உடைய காட்டில் பொருந்தி உள்ள தண்ணீர் கிடைக்க அருமையானதா? (அல்லது); அயல் ஒன்று உளதோ - வேறு ஏதாவது ஒன்று நேர்ந்து விட்டதோ?; இது என்னை கொலாம் - இவ்வாறு ஆனதற்கு என்ன காரணமோ? எண்ணிய கருமம் முடித்து வேகமாக வந்து சேரும் இயல்புள்ள இலக்குவன் காட்டில் நீர் கிடைக்காமையாலோ, வேறு ஏதோ ஏற்பட்டோ இன்னும் வந்து சேரவில்லை போலும் என இராமன் எண்ணினான். வெய்து - வெப்பம். மேவுதல் பொருந்தல், ஐது - அரிது. உண்மை எனினுமாம். ஈண்டு இன்மை குறித்தது. நொய்தாய் - விரைவாய், ஆல், ஆம் - அசைகள், கொல் - ஐயப்பொருள் தருவதோர் இடைச்சொல். 63 |