3605. | 'அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன் வஞ்சித்த இராவணன் வவ்வினனோ? நஞ்சின் கொடியான் நடலைத் தொழிலால், துஞ்சுற்றனனோ, விதியின் துணிவால்? |
அம் சொல் கிளி அன்ன அணங்கினை - அழகு மொழி பேசும் கிளி போன்ற அழகிய சீதையை; முன் வஞ்சித்த இராவணன் வவ்வினனோ - முன்னாளில் வஞ்சனையால் கவர்ந்து சென்ற இராவணன் (இப்போது இவனையும்) கவர்ந்து சென்றனனோ?; நஞ்சின் கொடியான் நடலைத் தொழிலால் - நஞ்சினைக் காட்டிலும் கொடியவனான இராவணனது வஞ்சனைத் தொழிலால்; விதியின் துணிவால் - ஊழ் வினையின் வலிமையால்; துஞ்சுற்றனனோ? - இறந்துபட்டானோ? வஞ்சனையால் கவரும் இராவணன் கொடுமை தொடர்கிறதோ என்பது இராமன் கொண்ட ஐயத் தடுமாற்றம். விதிக்கும் விதியாகும் விற்றொழில் வல்லவனாகிய இலக்குவனையும் விதி வென்றதால் இறந்திருப்பானோ என்ற அளவுக்கும் பெருமான் தடுமாறுகிறான். அணங்கு - பெண்களிற் சிறந்தவள். நடலை - வஞ்சனை. துஞ்சுற்றனன் - தகுதி வழக்கில் மங்கல வழக்கு என்க. தொழிலால், துணிவால் - ஆல் கருவிப் பொருளில் வந்தது. 65 |