3605.'அம் சொல் கிளி அன்ன
     அணங்கினை முன்
வஞ்சித்த இராவணன்
     வவ்வினனோ?
நஞ்சின் கொடியான்
     நடலைத் தொழிலால்,
துஞ்சுற்றனனோ,
     விதியின் துணிவால்?

    அம் சொல் கிளி அன்ன அணங்கினை - அழகு மொழி
பேசும் கிளி போன்ற அழகிய சீதையை; முன் வஞ்சித்த இராவணன்
வவ்வினனோ -
முன்னாளில் வஞ்சனையால் கவர்ந்து சென்ற
இராவணன் (இப்போது இவனையும்) கவர்ந்து சென்றனனோ?; நஞ்சின்
கொடியான் நடலைத் தொழிலால் -
நஞ்சினைக் காட்டிலும்
கொடியவனான இராவணனது வஞ்சனைத் தொழிலால்; விதியின்
துணிவால் -
ஊழ் வினையின் வலிமையால்; துஞ்சுற்றனனோ? -
இறந்துபட்டானோ?

     வஞ்சனையால் கவரும் இராவணன் கொடுமை தொடர்கிறதோ
என்பது இராமன் கொண்ட ஐயத் தடுமாற்றம். விதிக்கும் விதியாகும்
விற்றொழில் வல்லவனாகிய இலக்குவனையும் விதி வென்றதால்
இறந்திருப்பானோ என்ற அளவுக்கும் பெருமான் தடுமாறுகிறான்.
அணங்கு - பெண்களிற் சிறந்தவள். நடலை - வஞ்சனை.
துஞ்சுற்றனன் - தகுதி வழக்கில் மங்கல வழக்கு என்க. தொழிலால்,
துணிவால் - ஆல் கருவிப் பொருளில் வந்தது.                      65