3607.'உண்டாகிய கார் இருள்
     ஓடு ஒருவன்
கண்தான்; அயல் வேறு
     ஒரு கண் இலெனால்;
புண்தான் உறு
     நெஞ்சு புழுங்குறுவென்;
எண்தான் இலென்;
     எங்ஙனம் நாடுகெனா?

    உண்டாகிய கார் இருள் ஓடு - நிறைந்து உண்டாகிய கரிய
இருளில்; ஒருவன் கண் தான் - என்னை விட்டுப் பிரிந்த
ஒப்பற்றவனாகிய இலக்குவன், (எனக்குக்) கண்ணானவன்; அயல்
வேறு ஒரு கண் இலெனால் -
அவனைத் தவிர வேறு கண் ஒன்றும்
எனக்கு இல்லை; புண் தான் உறு நெஞ்சு புழுங்குறுவென் - (முன்பு
சீதையைப் பிரிந்ததால்) புண்மிகப்பட்ட நெஞ்சத்தில் (மீண்டும்)
வருத்தம் அடைகிறேன்; எண் தான் இலென் - (எதுவும்) எண்ண
முடியாது மனம் கலங்கி உள்ளேன்; எங்ஙனம் நாடு கெனோ -
(அவனை எங்கு) எவ்வாறு தேடுவேனோ?

     'இலக்குவனன்றிப் பிறிதொரு கண்ணிலாதவன் நான்; முன்பேபுண்பட்ட
நெஞ்சில் மீண்டும் புண்பட்டவன். அவனது பிரிவால் மனம்மிகக் கலங்கி
உள்ள நான் அவனை எவ்விடத்து எவ்வாறு தேடுவேன்'என இராமன்
கூறினான். எனக்குக் கண்ணாக இருந்தவன் பிரிந்ததால்கண்ணிழந்த நான்
தேடுவது எங்ஙனம் என்று குறித்த நயம் காண்க.தான், ஆல் - அசைகள்.
ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.                            67