3608. | 'தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்- உள்ளாய்! ஒரு நீயும் ஒளித்தனையோ? பிள்ளாய்! பெரியாய்! பிழை செய்தனையால்; கொள்ளாது உலகு உன்னை; இதோ கொடிதே! |
தள்ளா வினையேன் - நீக்க முடியாத வினையை உடையவனாகிய எனது; தனி ஆர் உயிர் ஆய் உள்ளாய் - ஒப்பில்லாத அருமையான உயிராக உள்ளவனாகிய; ஒரு நீயும் - ஒப்பற்றவனாகிய நீயும்; ஒளித்தனையோ - (என்னை விட்டுப் பிரிந்து) மறைந்து விட்டாயோ?; பிள்ளாய் - என் பிள்ளை போல் இளையவனே; பெரியாய் - அறிவில் பெரியவனே; பிழைசெய்தனை- (என்னைக் காரிருளில் கானகத்தே விட்டுச் சென்று) தவறு செய்து விட்டாய்; இதோ கொடிதே - இச்செயல் மிகக் கொடுமையானதேயாகும்; உன்னை உலகு கொள்ளாது - உனது செயலை உலகத்தில் உள்ள பெரியவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆல் - அசை. வினைப்படுபவனாகிய எனது ஒப்பற்ற தம்பியாகிய நீயும்என்னைப் பிரிந்து விட்டாய். உனது இச்செயலைப் பெரியவர்கள் ஏற்கமாட்டார்கள் என்று இராமன் நொந்து கூறினான். வினையேன் -குறிப்பு வினையாலணையும் பெயர் நீயும் - எம்மை இறந்தது தழீ இயஎச்ச உம்மை; முன்பே பிரிந்து விட்ட சீதையையும் நினைவுபடுத்துவதுஇவ்வும்மை. உலகு - இடவாகுபெயர். 68 |