3611. | 'பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள்- தன்-தேடி வருந்து தவம் புரிவேன், நின்-தேடி வருந்த நிரப்பினையோ? என்-தேடினை வந்த இளங் களிறே! |
என்தேடினை வந்த இளங்களிறே - (மாயமானின் பின்னால் சென்ற) என்னைத் தேடினையாகிய வந்த இளைய ஆண் யானையைப் போன்றவனே!; பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள் தன்- பொன்னால் ஆகிய தோடு என்னும் காதணி அணிந்தவளாகிய சீதையை; தேடி வருந்து - தேடி வருந்தித்; தவம் புரிவேன் - (தனித்துத்) தவம் புரிபவனாகிய என்னை; நின் தேடி வருந்த நிரப்பினையோ - உன்னைத் தேடி வருந்தும் படி செய்துவிட்டாயோ? மாயமான் பின் சென்ற என்னைத் தேடி வந்த நீ, சீதையைத் தேடித் தவம் புரிபவனாகிய என்னை, உன்னைத் தேடி வரும்படி செய்து விட்டாயே என்றவாறு. தோடு - மகளிர் காதணி. நிரப்புதல் - செய்தல். தன் - சாரியை. நின்தேடி - இரண்டாம் வேற்றுமைத்தொகை. இளங்களிறு - அடையடுத்த உவமையாகு பெயர். ஓகாரம்வினா. 71 |