3612. | 'இன்றே இறவாது ஒழியேன்; எமரோ, பொன்றாது ஒழியார், புகல்வார் உளரால்; ஒன்றாகிய உன் கிளையோரை எலாம் கொன்றாய்; கொடியாய்! இதுவும் குணமோ? |
இன்றே இறவாது ஒழியேன் - இன்றைக்கே நான் இறக்காமல் இருக்க மாட்டேன்; புகல்வார் உளரால் - (அதை அயோத்தியில் உள்ளவர்களுக்குச்) சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்; (ஆதலால்); எமரோ பொன்றாது ஒழியார் - (அதைக் கேட்ட) எம் உறவினர்கள் இறக்காமல் இருக்க மாட்டார்கள்; ஒன்றாகிய உன் கிளையோரை எலாம் கொன்றாய் - (இவ்வாறு செய்ததால்) ஒற்றுமை உடைய உன் உறவினர்கள் எல்லோரையும் நீ கொன்றவனானாய்; கொடியாய் - (இத்தகைய) கொடுமை உடையவனே; இதுவும் குணமோ - இதுவும் உனக்குத் தகுதியோ? 'நீ வராவிட்டால் நான் இறப்பேன். அது தெரிந்தால் நம் உறவினர் எல்லோரும் இறப்பர். இவ்வாறு அனைவரும் இறக்கத் தக்க செயல் செய்த கொடியவனே இது உனக்குத் தகுதியோ' என்று இராமன் கூறினான். எமர் - எம் உறவினர். பொன்றாது - அழியாது. ஆல் - அசை கொன்றாய் - காலவழுவமைதி. எலாம் - இடைக்குறை எமரோ - ஓகாரம் தெரிநிலை. குணமோ - ஓகாரம் எதிர்மறை. 72 |