3616. | கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று இமையாதவன், இத் துணை தாழ்வுறுமோ? சுமையால் உலகூடு உழல்தொல் வினையேற்கு, அமையாதுகொல் வாழ்வு? அறியேன்' எனுமால். |
கமையாளொடும் - பொறுமை உடையவளாகிய சீதையுடன்; என் உயிர் - எனது உயிரையும்; காவலில் நின்று - காக்கும் தொழிலில் (ஊன்றி) நின்று; இமையாதவன் - கண்ணிமைக்காமல் இருந்த இலக்குவன்; இத்துணை தாழ்வுறுமோ - (என்னை விட்டுப் பிரிந்து) இத்துணை காலம் தாழ்த்துவானா?; சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு - சுமையாக உலகத்தில் இருந்து வருந்துகிற பழைய வினையை உடைய எனக்கு; வாழ்வு அமையாது கொல் - (உயிருடன் கூடி வாழும்) வாழ்க்கை அமையாது போலும்; அறியேன்' எனுமால் - அறியேன் என்று (இராமன்) கூறினான். 'என்னையும் சீதையையும் கண் இமைக்காது காத்த இலக்குவன் இவ்வளவு நேரம் வராமல் இருப்பானா? இருக்க மாட்டான். உலகத்தில் பழியினை நுகர்ந்து வருந்தும் நான் உயிரோடு வாழ முடியாது போலும்' என இராமன் எண்ணினான். சுமையாள் - பொறுமை உடையவள் ஈண்டுச் சீதையைக் குறித்தது. சுந்தர காண்டத்தில் "கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உறக்கவ்வி (5078) என வருவதைக் காண்க. காவலில் நின்ற இமையாதவன் - இதனைக் கங்கை காண் படலத்தில் குகன் பரதனிடம் கூறிய "அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச (2344) என்ற பாடலால் அறிக. இலக்குவனுக்கு 'உறங்கா வில்லி' என்ற பெயர் உண்டு என்பதை நினைவு கொள்க. 76 |