இறக்க எண்ணிய இராமன் அரக்கியின் அலறல் கேட்டல்

3617.'அறப் பால் உளதேல், அவன்
     முன்னவன் ஆய்ப்
பிறப்பான் உறில், வந்து
     பிறக்க' எனா,
மறப்பால் வடி வாள் கொடு,
     மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற
     தொடர்ச்சியின் வாய்,

    அறப்பால் உளதேல் - நல்வினைப் பகுதி உண்டானால்;
அவன் முன்னவன் ஆய்ப்பிறப்பான் உறில் - (அந்த இலக்குவன்
எனக்குத்) தமையன் ஆக வந்து பிறக்கக் கூடுமானால்; வந்து பிறக்க
எனா -
வந்து பிறக்கட்டும் என்று கூறிக் கொண்டு; மறப்பால்
வடிவாள் கொடு -
வீரம் பொருந்திய கூர்மையான வாளைக்
கொண்டு; மன் உயிரை - தன் நிலை பெற்ற உயிரை; துறப்பான்
உறுகின்ற -
நீக்க முயல்கின்ற; தொடர்ச்சியின் வாய் - நேரத்தின்
கண்ணே.... (அடுத்த பாடலில் முடியும்).

     நல்லூழ் அமையுமானால் அடுத்த பிறவியில் அவன் எனக்குத்
தமையனாகப் பிறக்கிற பேறு வாய்க்கட்டும் என்று சொல்லி, இராமன்
வாளால் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் நிலையினை
இப்பாடல் சுட்டிற்று. அறப்பால் - அறத்தின் பயனாகிய நல்லூழ்.
அவன் எனக்குப் பாகவதனாயிருந்து செய்த கைங்கர்யங்களை நான்
அவனுக்குச் செய்ய நல் வினைப் பயனால் அவன் எனக்கு அடுத்த
பிறவியில் தமையன் ஆகப் பிறக்கட்டும் என்றவாறு.                  77