3621.நெடு வரை பொடிபட,
     நிவந்த மா மரம்
ஒடிவுற, நிலமகள் உலைய,
     ஊங்கு எலாம்,
'சட சட' எனும் ஒலி
     தழைப்பத் தாக்கவும்,
முடுகினன் இராமன், வெங்
     காலின் மும்மையான்.

    இராமன் - இராமன்; நெடுவரை பொடிபட - பெரிய மலைகள்
தூளாகவும்; நிவந்த மாமரம் ஒடிவுற - உயர்ந்த பெரிய மரங்கள்
ஒடியவும்; நிலமகள் உலைய - நிலமகள் வருந்தவும்; ஊங்கு எலாம்
-
பக்கங்களில் எல்லாம்; 'சட சட' எனும் ஒலி தழைப்ப - சட சட
என்ற ஓசை மிகவும்; வெங்காலின் மும்மையான் - கடுங்காற்றினும்
மூன்று மடங்கு வேகத்தோடு; தாக்கவும் முடுகினன் -
(அயோமுகியைத்) தாக்குவதற்காக விரைந்தான்.

     இராமன் பெரு மலை பொடிபட, நெடு மரம் ஒடிய, நிலமகள்
வருந்த, பக்கங்களில் எல்லாம் சட சட ஒலி எழக் காற்றினும் மூன்று
மடங்கு வேகத்தோடு அயோமுகியைத் தாக்க விரைத்தான். சட சட -
இரட்டைக் கிளவி, ஒலி குறித்து வந்தது. வெங்கால் - கடுங்காற்று.
முடுகுதல் - விரைதல்.                                        81