இராமன் இலக்குவனைத் தழுவி, நிகழ்ந்தது கேட்டல்

3625. தழுவினன் பல் முறை; தாரைக்
     கண்ணின் நீர்
கழுவினன், ஆண்டு
     அவன் கனக மேனியை;
'வழுவினையாம் என மனக்
     கொடு ஏங்கினேன்;
எழு என, மலை என,
     இயைந்த தோளினாய்!

    ஆண்டு - (இராமன் இலக்குவனை) அப்பொழுது; அவன்
கனக மேனியை -
அந்த இலக்குவனது பொன்னிற உடம்பை;
பல்முறை தழுவினன் - பலமுறை தழுவினான்; தாரைக் கண்ணின்
நீர் கழுவினன் -
தாரையாக வடிகிற (தன்) கண்ணீரால் கழுவினான்;
'எழு என மலை என இயைந்த தோளினாய் - கணைய மரம்
போன்றும் மலை போன்றும் பொருந்திய தோள்களை உடையவனே;
வழு வினையாம் என மனக் கொடு ஏங்கினேன் - (நீ இவ்வளவு
நேரம் வந்து சேராததால்) தவறிப் போய் விட்டாயோ? என்று
மனத்தில் கருதி வருந்தினேன். (என இராமன் கூறினான்).

     தாரை - ஒழுங்கு, கனகம் - பொன், எழு - கணைய மரம். கனக
மேனி - உவமைத்தொகை, கொடு - இடைக்குறை.                  85