இராமன் வருண மந்திரத்தால் வான நீர் பருகி, ஒரு மலையில் தங்குதல் 3633. | பேர அருந் துயர் அறப் பேர்ந்துளோர் என, வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார், வாருணம் நினைந்தனர்; வான நீர் உண்டு, தாரணி தாங்கிய கிரியில் தங்கினார். |
வீரனும் - வீரனாகிய இராமனும்; தம்பியும் - தம்பியாகிய இலக்குவனும்; பேர அருந்துயர் - நீக்க முடியாத பெருந்துன்பத்தை; அறப் பேர்ந்துளோர் என - முழுதும் நீக்கியவர் என்னுமாறு (அரக்கியால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி); வாருணம் நினைந்தனர் - வருண மந்திரத்தை எண்ணினர்; வான நீர் உண்டு - (அதனால்) வானத்தில் இருந்து கிடைத்த நீரைப் பருகி; விடிவு நோக்குவார் - பொழுது விடியும் காலத்தை எதிர் நோக்கியவர்களாய்; தாரணி தாங்கிய - நிலத்தைத் தாங்கிக் கொண்டுள்ள; கிரியில் தங்கினார் - ஒரு பெரிய மலையில் தங்கி இருந்தார்கள். இராமனும் தம்பியும் நீக்க முடியாத துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாகி, வருண மந்திரம் சொல்லி அதனால் கிடைத்த வான நீரைப் பருகிப் பொழுது விடியும் காலத்தை எதிர்நோக்கி ஒரு பெரிய மலையில் தங்கி இருந்தனர். பேரஅரும் - நீக்குதற்கு அரிய. அற - முழுமையாக. வாருணம் - வருண மந்திரம். அருந்துயர் - பண்புத்தொகை, பேர்ந்துளோர் - வினையாலணையும் பெயர். நோக்குவார் - முற்றெச்சம். வானநீர் - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. 93 |