3634. | கல் அகல் வெள்ளிடை, கானின் நுண் மணல், பல்லவம், மலர், கொடு படுத்த பாயலின், எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன், மெல் அடி, இளையவன் வருட, வீரனே. |
வீரன் - வீரனாகிய இராமன்; கல் அகல் வெள்ளிடை - கற்கள் பரந்துள்ள வெளியிடத்தில்; கானின் நுண்மணல் - காட்டில் உள்ள நொய்மையான மணல்; பல்லவம் - தளிர்கள்; மலர்கொடு - (மற்றும்) மலர்கள் (ஆகியவை கொண்டு இலக்குவன்); படுத்த பாயலின் - அமைத்த படுக்கையில்; எல்லை இல் துயரினோடு இருந்து - அளவற்ற பெருந்துன்பத்தோடு இருந்து; மெல் அடி - (தனது) மென்மையான பாதங்களை; இளையவன் வருட - இளையவன் ஆகிய இலக்குவன் மெதுவாகத் தடவ; சாய்ந்தனன் - பள்ளி கொண்டான். ஏ - ஈற்றசை. இராமன் வெட்ட வெளியில் மணல், தளிர்கள், மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு இலக்குவன் அமைத்த படுக்கையில், அவன் மெத்தெனத் திருவடி வருடப் பள்ளி கொண்டான். வெள்ளிடை - மேல் மறைவில்லாத இடம், வெட்ட வெளி என்ப. பல்லவம் - தளிர். படுத்த - அமைத்த. பரமனுக்குப் பாகவதன் செய்யும் கைங்கர்யத்தை ஈற்றடியால் கூறினார். இதில் உடன்பிறப்புப் பாசம் நிறைந்து உள்ளமையையும் எண்ணுக. கொடு - இடைக்குறை. மெல் அடி - பண்புத்தொகை. |