3637. | கருங்குழல், சேயரிக் கண்ணி, கற்பினோர்க்கு அருங் கலம், மருங்கு வந்து இருப்ப, ஆசையால் ஒருங்குறத் தழுவுவென்; ஒன்றும் காண்கிலேன்; மருங்குல்போல் ஆனதோ வடிவும், மெல்லவே? |
கருங்குழல் - கருமையான கூந்தலினையும்; சேயரிக் கண்ணி - செவ்வரி படர்ந்த கண்களையும் உடைய; கற்பினோர்க்கு அருங்கலம்- கற்பினை உடைய மகளிருக்கு அருமையான அணிகலன் போன்ற (சீதை) ; மருங்கு வந்து இருப்ப - (என்) பக்கத்தில் வந்து இருக்க; ஆசையால் ஒருங்குறத் தழுவுவென் - (அவள் மீது கொண்ட) காதலால் உடல் சேரத் தழுவுவேன்; ஒன்றும் காண்கிலேன் - (ஆனால் அவ்வாறு தழுவியும்) ஒன்றையும் காணவில்லை; வடிவும் - அச்சீதை உடைய உருவமும்; மருங்குல் போல் மெல்லவே ஆனதோ - (அவளது பொய்யோ எனும்) இடையினைப் போல்; மெதுவாக - இல்லையாய்விட்டதா? சீதையின் உருவெளித் தோற்றத்தை உண்மையென நம்பித் தழுவிய இராமன், அவளது இடை போல் உருவமும் இல்லாமல் போய் விட்டதோ என்கிறான். குழல் - கூந்தல். அரி - வரி. மருங்கு - பக்கம். மருங்குல் - இடை. மூவழிப் பெருகி மூவழிச் சிறுகிய உறுப்புகள் கொண்டவள் என்பதைக் கூறியவாறு. கருங்குழல் - பண்புத் தொகை. கற்பினோர் - வினையாலணையும் பெயர். அருங்கலம் - பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 97 |