3642. | 'நிலம் பொறை இலது' என, நிமிர்ந்த கற்பினாள், நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய, அலம்புறு பறவையும் அழுவவாம் எனப் புலம்புறு விடியலில், கடிது போயினார். |
நிலம் பொறை இலது என - இந்த நிலவுலகம் பொறுமை உள்ளதன்று என்று கூறும்படி; நிமிர்ந்த கற்பினாள் - உயர்ந்த கற்பினை உடையவளாகிய; பொறை நலம் கூர்தரும் - பொறுமைப் பண்பு மிக்குடைய; மயிலை - மயில் போன்ற சாயலை உடைய சீதையை; நாடிய - தேடி; அலம்புறு பறவையும் - அலைதலைக் கொண்ட பறவைகளும்; அழுவவாம் என - அழுகின்றன என்று கூறும்படியாக; புலம்புறு விடியலில் - (அப்பறவைகள்) ஒலிக்கிற விடியல் காலத்தில்; கடிது போயினார் - விரைவாகச் (சீதையைத்) தேடிப் போனார்கள். விடியலில் பறவைகள் ஒலி எழுப்புவது சீதையைத் தேடி அவளைக் காணாமல் அவை அழுவன போன்ற என்றார். தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினும் பொறுமை உடையள் அந்நிலத்துத் தோன்றிய சீதை என்றபடி. அலம்புறு பறவை - அலைதலைக் கொண்ட பறவை. மயில் - உவமையாகு பெயர். இப்படலத்தில் சீதையைத் தேடல், இலக்குவனைத் தேடல் என்ற இருவகைத் தேடல்களும், சீதையைப் பிரிந்த அவலம், இலக்குவனைப் பிரிந்த அவலம் என்ற இருவகை அவலங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த இரட்டை நிலையை உணர்ந்து தெளிக. 102 |