3646.மால் வரை உருண்டன
     வருவ; மா மரம்
கால் பறிந்திடுவன;
     கான யாறுகள்
மேல் உள திசையொடு
     வெளிகள் ஆவன;
சூல் முதிர் மேகங்கள்
     சுருண்டு வீழ்வன;

இச் செய்யுள்கள் மூன்றும் ஒரு தொடர்ச்சி

     (கவந்தனின் கைப்பரப்புக்குள் சிக்கிய); யானையே முதல்
எறுப்பு இனம் கடையுற உறுப்பு உடை உயிர் எலாம் -
பேருருவம்
கொண்ட யானை முதலாகச் சிறு வடிவம் கொண்ட எறும்பு வரையுள்ள
உடல் கொண்ட உயிர்கள் யாவும்; உலைந்து சாய்ந்தன -
நிலைகுலைந்து சாய்ந்தன; வெறிப்பு உறு நோக்கின - அவை
வெறித்த பார்வையுடையனவாய்; வெருவுகின்றன - அஞ்சின; பறிப்பு
அருவலையிடைப் பட்ட பான்மைய -
(மேலும் அவை) நீக்குதற்கு
அரிய வலையிலே அகப்பட்டுக் கொண்ட தன்மையுடையவையாயின.

     மரபுளி நிறுத்திலன் - அந்தந்த நிலைகளில் அவ்வவற்றை
நிறுத்தாதவனும்; புரக்கும் மாண்பு இலன் - ஆளும் மாட்சிமை
இல்லாதவனும்; உரன் இலன் ஒருவன் - வலிமை இல்லாதவனும்
ஆகிய ஓர் அரசனின்; நாட்டு உயிர்கள் போல்வன - நாட்டிலே
வாழ்கின்ற குடி மக்களைப் போன்றவையாயின; வெருவுவ -
அவ்வுயிர்கள் யாவும் அஞ்சின; சிந்துவ - சிதறின; குவிவ -
(உள்ளமே யன்றி) உடல்களும் குவிந்தன; விம்மலோடு இரிவன -
துயரத்தோடு ஓடின; மயங்குவ - திகைத்து நின்றன; இயல்பு
நோக்கினர் -
இவ்வாறு துன்புற்ற உயிர்களின் தன்மையை
இராமலக்குவர் பார்த்தனர்.

     மால்வரை உருண்டன வருவ - பெரிய மலை(ப் பாறைகள்)
உருண்டு வந்தன; மா மரம் கால் பறிந்திடுவன - மரங்கள் வேர்
அற்று வீழ்ந்தன; கான யாறுகள் மேல் உள திசையொடு வெளிகள்
ஆவன -
மேலே உள்ள திசைகள் அளவு (பொங்கிப் பரவி) நீரற்ற
வெட்டவெளி ஆயின; சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன -
கருக் கொண்ட (நீர் உண்ட) மேகங்கள் சுருண்டு கீழே வீழ்ந்தன.

     கவந்தன் கையகப்பட்டவையெல்லாம் நிலை குலைந்தமையால்,
அவன் கைகளுக்கு உட்பட்டவை மட்டுமல்லாமல் எங்கணும் உள்ள
யாவையும் நிலைகுலைந்தமையை மூன்று செய்யுட்களும்
தொகுத்துரைக்கின்றன. பெரிய உடல் கொண்ட யானை முதல்
சிற்றுடல் கொண்ட எறும்பு வரை என்று எல்லை குறித்தது எல்லா
உயிர்ப் பொருள்களையும் கருதி; வலையிலகப்பட்ட உயிர்கள்
அச்சத்தால் வெறித்த பார்வை கொண்டன என்றது யாரால் என்ன
தீங்கு வரப் போகிறது என்று அறிய இயலாமையைச் சுட்டியது.
ஆட்சித் திறன் அற்ற அரசனின் நிர்வாகத்தில் எவரும் எவ்வகையான
நிலைபேறும் அற்றவர்களாய் ஒவ்வொரு கணமும் அழிவையே
எதிர்நோக்கிக் கலங்கி நசிவர். இது உவமையாய்ப் பல்லுயிர்களும்
அலமந்த அவலத்தை விளக்கிற்று. கானகத்தில் ஏற்பட்ட குழப்பத்தால்
காட்டாறுகள் நிலை கலங்கிப் பொங்கித் திசை எல்லைகளை
அடைந்தன; காட்டாறுகள் ஓடிய இடங்கள் வெற்றிடங்களாயின.
நிலத்து நிகழ்ச்சி இது; வானில் நிகழ்ந்த நிலைகுலைவால் மேகங்கள்
சுருண்டு நிலத்திலே வீழ்ந்தன. உயிரினங்களில் இயங்குவன
மண்ணுலகு. விண்ணுலகு யாவும் கவந்தன் கரங்களின் இயக்கத்தால்
நிலை குலைந்தன என்கிறார் கவிச்சக்ரவர்த்தி.                  2, 3, 4