3650.'முற்றிய அரக்கர்தம்
     முழங்கு தானையேல்,
எற்றிய முரசு ஒலி,
     ஏங்கும் சங்கு இசை,
பெற்றிலது; ஆதலின், பிறிது
     ஒன்று ஆம்' எனச்
சொற்றனன் இளையவன், தொழுது
     முன் நின்றான்.

    முற்றிய அரக்கர்தம் முழங்கு தானையேல் - நம்மைச் சுற்றி
வளைத்த அரக்கர்களின் சேனையாக இருக்குமென்றால்; எற்றிய முரசு
ஒலி -
(குறுந்தடி கொண்டு) தாக்குதலால் எழும் முரசுகளின்
ஓசையையும்; ஏங்கும் சங்கு இசை - ஒலிக்கின்ற சங்குகளின்
ஓசையையும்; பெற்றிலது - நாம் கேட்கும் ஆரவாரம்
பெற்றிருக்கவில்லை; ஆதலின் பிறிது ஒன்று ஆம் - ஆகையால்,
நாம் கேட்கும் ஆரவாரம் வேறு ஏதோ ஒன்றாகும் (போர்ப் படையின்
ஆரவாரம் அன்று); என இளையவன் சொற்றனன் - என்று தம்பி
இலக்குவன் சொல்லி; தொழுது முன் நின்றான் - இராமனை வணங்கி
அவன் முன் நின்றான்.

     போர்ப் பறையும் வீரர்கள் ஊதும் சங்கின் ஓசையும்
கேட்காததால் படை ஏதும் வரவில்லை என்பதை இளையவன்
தெளிந்து கூறினான். எத்துணைப் பெரியராயினும் உணர்ச்சி நிலை
குலைந்தால் குழம்புவர் போலும். இது போலவே, கானக
வாழ்வின்போது தமையன் தவறாகக் கணித்த நேரங்களில் தம்பி
தெளிவு கூறிய வேறு இடங்களும் உண்டு. எடுத்துக் காட்டாக மாரீச
மான் பற்றிய நிகழ்ச்சி காண்க. தொழுதமைக்குத் தான் ஏதோ தெளிந்த
பெருமிதத்தான் என்று கருதிக் கொள்ளாமை காரணம்; முன்
நின்றமைக்கு ஆபத்து வருமேல் 'முன்னம் முடி' என்று தாய்
சுமித்திரை ஏவிய நினைவு காரணம்.