கவந்தன் தோற்றம்

3652 என்று இவை விளம்பிய
     இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன்,
     நடந்த நாயகன்;
ஒன்று இரண்டு யோசனை
     உள் புக்கு, ஓங்கல்தான்
நின்றென இருந்த அக் கவந்தன்
     நேர் சென்றார்.

    என்று இவை விளம்பிய - என்று இவற்றைச் சொல்லிய;இளவல்
வாசகம் -
தம்பி இலக்குவனின் வார்த்தை; நன்று என -பொருத்தமானதே
என்று; நடந்த நாயகன் நினைந்தனன் - (உயிர்கள்மேல் கொண்ட
இரக்கத்தால் அவதரித்துப் புவி மீது) நடந்ததலைவனாகிய இராமன்
எண்ணினான்; ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு - ஒன்று
அல்லது இரண்டு யோசனைத் தொலைவு உள்ளே கடந்து சென்று;
ஓங்கல்தான் நின்றென - ஒரு மலையே நின்றது போல; இருந்த
அக் கவந்தன் நேர் சென்றார் -
அமர்ந்திருந்த அந்தக் கவந்தனுக்கு
நேராகச் சென்றடைந்தனர் இருவரும்.

     ஒன்று இரண்டு யோசனை' என்பது உலக வழக்கில் பேசுவது
போல் அமைந்தது; திட்டவட்டமாக வரையறுத்துக் கூறாதபோது ஒன்று
அல்லது இரண்டு' என்ற பொருள்பட 'ஒன்றிரண்டு' எனப் பேசுவது
பொது வழக்கு. மலை நின்றால் அமர்ந்திருக்கும் கவந்தன் போலக்
காட்சியளிக்குமாம்; நிற்பதற்குக் கால் இல்லாத கவந்தன் இருந்த
கோலத்திலேயே நிமிர்ந்து நிற்கும் ஒங்கல் போன்றவன். அவன்
தோற்றத்தைச் சொல்லோவியப்படுத்தியது அருமை.                   10