3654. ஈண்டிய புலவரோடு
     அவுணர், இந்துவைத்
தீண்டிய நெடு வரைத்
     தெய்வ மத்தினைப்
பூண்டு உயர் வடம், இரு
     புடையும் வாங்கலின்,
நீண்டன கிடந்தென
     நிமிர்ந்த கையினான்.

    ஈண்டிய புலவரோடு அவுணர் - திரண்ட தேவர்களோடு
அசுரர்களும் சேர்ந்து; இந்துவைத் தீண்டிய நெடுவரைத் தெய்வ
மத்தினைப் பூண்டு உயர் வடம் -
சந்திரனைத் தொடும் அளவுக்கு
உயர்ந்த மேருவாகிய மத்தினைச் சுற்றி உயர்ந்த வடத்தினை; இரு
புடையும் வாங்கலின் -
இரண்டு பக்கத்திலுமிருந்து இழுத்துக்
கடைதலால்; நீண்டன கிடந்தென - அவ் வாசுகி நீண்டு கிடந்தது
போன்ற; நிமிர்ந்த கையினான் - நீண்ட கைகளை உடையவனும்.

     இந்து : சந்திரன். மேரு மலை தெய்வீகம் பொருந்தியதாகலின்
தெய்வ மத்து எனப்பட்டது.                                  12