3659.முற்றிய உயிர் எலாம்
     முருங்க வாரி, தான்
பற்றிய கரத்தினன்,
     பணைத்த பண்ணையில்
துற்றிய புகுதரும்
     தோற்றத்தால், நமன்
கொற்ற வாய்தல் செயல்
     குறித்த வாயினான்.

    முற்றிய உயிர் எலாம் - முற்றுகையிடப்பட்ட உயிர்கள் யாவும்;
முருங்க வாரி - அழியும்படியாக வாரியெடுத்து; தான் பற்றிய
கரத்தினன் -
தான் பற்றிக் கொண்ட கைகளை உடையவனாய்;
பணைத்த பண்ணையில் - (கூட்டமாகப்) பெருகிய தொகுதியாக;
துற்றிய - திணிக்கப்படும் உயிரினங்கள்; புகுதரும் தோற்றத்தால் -
(கவந்தன் வயிற்றில் அமைந்த வாய்க்குள்ளே) புகுகின்ற காட்சியால்;
நமன் - கூற்றுவனுடைய; கொற்ற வாய்தல் செயல் - வெற்றி
கொண்ட வாசலில் உயிர்கள் நுழைகின்றதை; குறித்த வாயினான் -
(உவமையாகக்) குறிக்கத் தக்க வாயினை உடையவன்.

     கானகத்தின் பல பக்கங்களிலும் திரிகின்ற உயிரினங்கள் மிகப்
பெரிய கவந்தனின் கரங்களுக்கிடையே அகப்பட்டுக் கொள்கின்றன;
அப்போது அவை முற்றுகைக்குள் சிக்கியவை ஆகின்றன. முருங்குதல்;
அழிதல். பண்ணை; கூட்டம். கூற்றுவன் உயிர்களைப் பற்றுதலில்
வெற்றியையன்றித் தோல்வி அறியாதவன்; ஆகையால், அவன் வாசல்
கொற்ற வாயில் எனப்பட்டது. வாய்தல்; வாசல். கூற்றுவனது நகர்
வாசல் கவந்தன் வாய்க்கு உவமை.                            17