இராமலக்குவர் கவந்தன் வாயைக் கண்டு கருதியவை 3662. | நீர் புகு நெடுங் கடல் அடங்கு, நேமி சூழ் பார் புகு நெடும் பகு வாயைப் பார்த்தனர்; 'சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில் ஊர் புகு வாயிலோ இது?' என்று, உன்னினார். |
நீர் புகு - ஆறுகள் புகுகின்ற; நெடுங்கடல் - பெரிய கடல்களெல்லாம்; அடங்கு - தன்னுள் அடங்கப்பெற்ற; நேமி சூழ் - சக்கரவாள மலையால் சூழப்பட்டுள்ள; பார்புகு - உலகமே நுழையும் படியாக உள்ள; நெடும் பகு வாயைப் பார்த்தனர் - பெரிய தாயும் பிளந்துள்ளதாயும் உள்ள (கவந்தனது) வாயைப் பார்த்து; இது - இந்தப் பிளவு; சூர் புகல் அரியது - தேவர்களும் உட்புகுதற்கு அரிய; ஓர் அரக்கர் - அரக்கருக்கு உரியதாகிய; தொல்மதில் ஊர் புகுவாயிலோ - பழமையான மதில் அமைந்த ஊருக்குள் புகுகின்ற வாசலோ; என்று உன்னினார் - என்று இராமலக்குவர் கருதினார்கள். நெடுங்கடலில் புகுதலைப் பின்னர் கூறினமையால் நீர் என முதலிற் சொன்னது ஆகுபெயராய் ஆறுகளைச் சுட்டிற்று. கடலைச் சூழ்ந்து உலக எல்லையில் வட்டமாக ஒரு மலை இருப்பதாகச் சொல்வது புராண மரபு. நேமி : சக்கரம்; சக்கரம் போல் வட்டமாக அமைந்த சக்கரவாள மலை. சூர் : தேவர்; கதிரவன் ஒளி புகா.... மதிள் (4657) என இலங்கை மதிலைக் கம்பர் குறிப்பது கொண்டு இவ்வாறு பொருள் கொள்ளலும் பொருத்தமே. 'இரு சுடர் மீதினில் இயங்கா மும்மதிள் இலங்கை' என்பது திருமங்கை யாழ்வார் வாக்கு (திருவெழு கூற்றிருக்கை 3-4) ஆழ்வாரின் இவ்வாக்கே கம்பர் கற்பனைக்கு மூலமாக இருத்தல் கூடும். பார்த்தனர் - முற்றெச்சம். 20 |