'பழி சுமந்து வாழேன்' என்று, இராமன் கூறல் 3664. | 'தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்; வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலேன்; ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்; ஏகுதி ஈண்டுநின்று, இளவலே!' என்றான். |
இளவலே - என் தம்பியே; தோகையும் பிரிந்தனள் - (கானகம் வந்தபின்) மயில் போன்ற சாயல் கொண்ட சீதையும் பிரிந்தாள்; எந்தை துஞ்சினன் - தந்தை முறையினனாகிய சடாயுவும் இறந்தான்; வேக வெம் பழி சுமந்து - (இவ்வாறு எனக்கு அரியராகிய இருவரையும் பேண முடியாமையால்) விரைந்து பரவக்கூடிய கொடிய பழியைச் சுமந்து கொண்டு; உழல வேண்டலேன் - உயிர் கொண்டு அலைய நான் விரும்பவில்லை; ஆதலின் - ஆகையால்; யான் இனி இதனுக்கு ஆமிடம் - நான் இனிமேல் இப்பூதத்துக்கு உணவு ஆவேன்; ஈண்டு நின்று ஏகுதி என்றான்? - இங்கிருந்து நீ தப்பிப் போவாயாக என்றான். தோகை - முதலில் மயிலுக்கு ஆகி, அடுத்து மயிலனைய சாயல் கொண்ட சீதைக்கு ஆகி வந்த இருமடி ஆகுபெயர். தோகையும் என்பதில் உம்மை எதிரது - தழீஇய எச்சவும்மை. ஆமிடம் - ஆமிஷம் என்ற வட சொல்லின் தமிழ் வடிவம்; உணவு என்னும் பொருள் உடையது; பின்னரும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது (4806) 22 |