3665.'ஈன்றவர் இடர்ப்பட,
     எம்பி துன்புற,
சான்றவர் துயருற,
     பழிக்குச் சார்வுமாய்த்
தோன்றலின், என்
     உயிர் துறந்தபோது அலால்,
ஊன்றிய பெரும் படர்
     துடைக்க ஒண்ணுமோ?

    ஈன்றவர் இடர்ப்பட - பெற்றோர் துன்பம் அடையவும்; எம்பி
துன்புற -
என் தம்பியாகிய பரதன் துன்பப்படவும்; சான்றவர் துயர்
உற -
பெரியவர்கள் வருத்தமுறவும்; பழிக்குச் சார்வுமாய் -
(உற்றாரும் பெரியோரும் துன்பமடையக் காரணன் ஆனதோடு,
மனையாளையும் சடாயுவையும் காப்பாற்ற முடியாத) பழிக்கு இடமாகி;
தோன்றலின் - யான் தோன்றியுள்ளமையால்; என் உயிர் துறந்த
போது அலால் -
என் உயிரை விட்டபோதன்றி; ஊன்றிய பெரும்
படர் -
நிலைத்துவிட்ட இப் பெரும்பழியை; துடைக்க ஒண்ணுமோ -
அழிக்க முடியுமா?

     'தோன்றிற் புகழோடு தோன்றுக' என்ற குறள் நெறிக்கு எதிர்
மறையாகப் பழியோடு தோன்றியதாகக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி;
இங்கே எதிர்மறுத்து எதிரொலிப்பதை உணர்க. ஓகாரம் எதிர்மறை.     23