3674.'கேட்டார் கொள்ளார்; கண்டவர்
     பேணார்; "கிளர் போரில்
தோட்டார் கோதைச் சோர்
     குழல்தன்னைத் துவளாமல்
மீட்டான் என்னும் பேர் இசை
     கொள்ளான், செரு வெல்ல
மாட்டான், மாண்டான்" என்றலின்மேலும்
     வசை உண்டோ?

     கேட்டார் - (தளர்ந்து உயிர்விடத் துணிந்த உன் நிலை பற்றிக்)
கேள்விப் பட்டவர்கள்; கொள்ளார் - உன் முடிவை ஏற்கமாட்டார்கள்;
கண்டவர் பேணார் - நேரிலேயே காண நேரிட்டவர்கள் உன்
செயலை விரும்பமாட்டார்கள்; 'கிளர் போரில் - (சீதையை மீட்கும்
பொருட்டுக்) கிளர்ந்தெழுகின்ற போரிலே; தோடு ஆர் கோதைச்
சோர் குழல் தன்னை -
தொகுதியான மாலையணிந்து வாழும்
கூந்தலாளான சீதையை; துவளாமல் மீட்டான் என்னும் பேர் இசை
கொள்ளான் -
தளராமல் மீட்டுவிட்டான் என்று உலகவர் சொல்லும்
பெரிய புகழைக் கொள்ளாதவனாய்; செரு வெல்ல மாட்டான் -
போரிலே வெற்றி கொள்ள முடியாதவனாய்; மாண்டான் - இராமன்
இறந்தான்; என்றலின் மேலும் - என்று சொல்லப்படுவதைவிட; வசை
உண்டோ -
பழி உண்டோ?'

     பேணுதல் - விரும்புதல், தோடு + ஆர் = தோட்டார்; தோடு -
தொகுதி; இங்கே மலர்களின் தொகுதி. கிளர் போர், சோர் குழல்;வினைத்
தொகைகள் - சோர்குழல் வினைத் தொகைப் புறத்துப் பிறந்தஅன்மொழித்
தொகை; இங்கே சீதை கொள்ளான், மாட்டான் -முற்றெச்சங்கள்.       32