3686.'எண் திசையும் திண் சுவரா,
     ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு
     எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின்மேல்,
     என்றும் மலராத
புண்டரிக மொட்டின் பொகுட்டே
     புரை; அம்மா!

    எண் திசையும் திண் சுவரா(க) - எட்டுத் திசைகளே
வலிமையான சுவர்களாக அமைய; ஏழ் ஏழ் நிலை வகுத்த -
பதினான்கு நிலைகள் உடையதாக வகுக்கப்பட்ட; அண்டப் பெருங்
கோயிற்கு எல்லாம் -
அண்டமாகிய பெரிய கோயில் முழுவதற்கும்;
அழகுடைய மண்டலங்கள் மூன்றின் மேல் - சூரிய, சந்திர
நட்சத்திரம் என்னும் அழகிய மூன்று மண்டலங்களுக்கு மேலாக;
என்றும் மலராத புண்டரிக மொட்டின் பொகுட்டு - எப்பொழுதும்
மலராத தாமரை அரும்பின் கொட்டையே; புரை - உனது இருப்பிடமாகும்.

     திருமாலின் இருப்பிடத்தைக் கூறுவது இச் செய்யுள் அண்டமே
கோயில்; திசைகளே சுவர், மேல் ஏழும் கீழ் ஏழுமாக அமைந்துள்ள
உலகங்களே கோயிலின் அடுக்கு நிலைகள் அக்கோயிலுக்கு ஒளி
ஊட்டுவன சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்கள்; அந்த ஒளி
மண்டலங்களின் ஒளி பெற்றுத் தான் மலர வேண்டுமென்றில்லாததொரு
தாமரை அரும்பு; அந்த அரும்பினுள் உள்ள காணிகை என்னும்
(தாமரைக்) காயே பரமபதமாகிய இருப்பிடம். பூவுலகத்துத் தாமரை
மலர்வதற்குக் கதிரவன் ஒளி தேவை; ஆயின், பரமபதத் தாமரைக்குக்
கதிரவன் முதலாய ஒளி மண்டலங்களின் உதவி தேவைப்படாது ஏழ்
ஏழ் (ஏழேழ்) உம்மைத் தொகை (ஏழும் ஏழும்).                    44