இலக்குவன் வினவுதல் 3692. | 'பாராய், இளையவனே! பட்ட இவன், வேறே ஓர் பேராளன்தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய், நேர், ஆகாயத்தின்மிசை நிற்கின்றான்; நீ இவனை ஆராய்! என, அவனும், 'ஆர்கொலோ நீ? என்றான். |
'இளையவனே - தம்பீ; பாராய் - மேலே நிற்பவனைப் பார்; பட்ட இவன் - இறந்து போன இவன்; வேறே ஓர் பேராளன் தானாய் - மற்றொரு வடிவம் கொண்டு பெருமையை ஆள்பவனாயும்; ஒளி ஓங்கும் பெற்றியனாய் - ஒளி பெருகும் தன்மை உடையவனாயும்; நேர் - நேராக நம் முன்னே; ஆகாயத்தின்மிசை நிற்கின்றான் - விண் மீது நிற்கின்றான்; நீ இவனை ஆராய் -இவனைப் பற்றிய விவரங்களை நீ ஆராய்ந்து அறிவாயாக; என -என்று இராமன் சொல்ல; அவனும் - இளவலாகிய இலக்குவனும்;'ஆர்கொலோ நீ - நீ யார்; என்றான் - என்று கவந்தனைவினவினான். 50 |