அறுசீர் ஆசிரியவிருத்தம் 3693. | 'சந்தப் பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன்; ஓர் கந்தர்ப்பன்; சாபத்தால், இக் கடைப்படு பிறவி கண்டேன்; வந்துற்றீர் மலர்க்கை தீண்ட, முன்னுடை வடிவம் பெற்றேன்; எந்தைக்கும் எந்தை நீர்; யான் இசைப்பது கேண்மின்' என்றான். |
'சந்தப் பூண் அலங்கல் வீர! - அழகிய அணிகளும் மாலையும் அணிந்துள்ள வீரனே; தனு எனும் நாமத்தேன் - நான் தனு என்ற பெயருடையவன்; ஓர் கந்தர்ப்பன் - நான் ஒரு கந்தருவன்; சாபத்தால் - ஒரு முனிவர் இட்ட சாபத்தால்; கடைப்படு இப் பிறவி கண்டேன் - கீழானதாகிய இந்தக் கவந்தப் பிறப்பை அடைந்தேன்; வந்துற்றீர் மலர்க்கை தீண்ட - இங்கு வந்து சேர்ந்தவர்களாகிய உங்கள் மலர் போன்ற கைகள் தீண்டியமையால்; முன்னுடை வடிவம் பெற்றேன் - எனக்கு உரியதாகிய பழைய வடிவத்தைப் பெற்றேன்; எந்தைக்கும் எந்தை நீர் - என் தந்தைக்கும் தந்தையர் போன்றவர்கள் நீங்கள்; யான் இசைப்பது கேண்மின்' - நான் சொல்லுவதைக் கேளுங்கள்; என்றான் - என்று மறு வடிவம் கொண்ட கவந்தன் கூறினான். தனு என்பது கவந்தனின் முற்பெயர். விசுவாவசு என்று கூறுவதும் உண்டு. 51 |