3695. | 'பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து உழைப் பெருந் தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே, ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை? |
'பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் - பழித்துக் கூற முடியாத நிலையில் உள்ள உங்களது ஆண்மை பற்றி விரித்துரைத்தல் வேண்டுமா என்ன (வேண்டியதில்லை); பதுமபீடத்துழை - தாமரையாகிய பீடத்தில் (எழுந்தருளியுள்ள); பெருந் தகைமை சான்ற அந்தணன் - பெருமை மிக்க வேதியனாகிய நான்முகன்; உயிர்த்த எல்லாம் - படைத்தவற்றை யெல்லாம்; அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் - அழிப்பதற்கென்றே ஒப்பற்றவனாய் உள்ள சிவபிரான்கூட; ஒழிப்ப அருந் திறல் - அழிப்பதற்கரிய ஆற்றல் கொண்ட; பல் பூத கணத்தொடும் - பல பூதங்களின் கூட்டத்துடன்; உறையும் உண்மை அறிதிர் அன்றே - சேர்ந்திருக்கும் உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அன்றோ. அண்ணலும் - உயர்வு சிறப்பும்மை. அழிப்பதற்கென்றே தனிப் பெருந்திறனாளனாகிய சிவபிரானே பூதகணங்களின் உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டி, இராமலக்குவர்கள் துணை வலி நாட வேண்டும் என்பதைக் கவந்தன் வற்புறுத்துகிறான். 53 |