3697. | 'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், ஈண்ட, வெதிர் பொரும் தோளினாளை நாடுதல் விழுமிது' என்றான். அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார். |
'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை - சூரிய தேவனின் மகனும் பொன்போல ஒளிகொண்ட நிறம் உடையவனும் ஆகிய சுக்கிரீவனை; எதிர் எதிர் தழுவி - ஒருவருக்கொருவர் எதிர் கொண்டு தழுவி; நட்பின் இனிது அமர்ந்து - நட்பிலே இனிது பொருந்தி; அவனின் - அவன் உதவியால்; ஈண்ட - விரைவாக; வெதிர் பொரும் தோளினாளை - மூங்கிலை ஒத்த தோள் கொண்ட சீதையை; நாடுதல் விழுமிது - தேடுவது சிறந்தது; என்றான் - என்று கவந்தன் கூறினான்; அதிர்கழல் வீரர் தாமும் - ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த இராமலக்குவர்களாகிய வீரர்களும்; அன்னதே அமைவது ஆனார் - அவன் சொன்னதையே உடன்பட்டார்கள். சுக்கிரீவன் கதிரவன் மைந்தன்; பொன்னிற மேனி உடையவன். நிறத்தினான் என்ற சொல்லுக்கு உடல் உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். அதிர் கழல் - வினைத்தொகை. 55 |