3698. ஆன பின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து
     அவனும் போனான்
மானவக் குமரர்தாமும் அத் திசை வழிக்
     கொண்டு ஏகி
கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து
     இறுக்கும் காலை,
யானையின் இருக்கை அன்ன, மதங்கனது
     இருக்கை சேர்ந்தார்.

    ஆனபின் - அதன்பின்; அவனும் - கவந்தன்; தொழுது
வாழ்த்தி -
இராம இலக்குவரைத் தொழுது வாழ்த்தி; அந்தரத்துப்
போனான் -
விண் வழியே போனான்; மானவக் குமரர்தாமும் -
மனு மரபில் தோன்றியவர்களாகிய இராமலக்குவரும்; அத் திசை
வழிக்கொண்டு ஏகி -
கவந்தன் குறித்த இரலை மலை இருந்த திசை
நோக்கிய வழியிலே சென்று; கானமும் மலையும் நீங்கி - காடும்
மலையும் கடந்து; கங்குல் வந்து இறுக்கும் காலை - இரவு நேரம்
வந்து சேர்ந்தபோது; யானையின் இருக்கை அன்ன - யானைகள்
இருக்கும் இடம் போன்ற; மதங்கனது இருக்கை சேர்ந்தார் - மதங்க
முனிவரது ஆச்சிரமத்தை அடைந்தார்கள்.

     மனு மரபில் வந்தவர் மானவர்; வட மொழித் தத்திதாந்த நாமம்.
மானம் என்பது தமிழில் உயர்வைக் குறிக்கும்; உயர்வுடைய குமரர்என்ற
பொருளில் மானவக்குமரர் என்றார் எனலுமாம். இருக்கை - இருக்கும்
இடத்தைக் குறிக்கும் தொழிலாகுபெயர். மதங்க முனிவர்
யானைகளிடத்துப் பரிவு கொண்டவராய் அவற்றைப் பேணியவர்.
ஆதலின், அவருடைய ஆச்சிரமச் சூழலில் யானைகள் மிகுதியாக
வாழ்ந்தன என்பர். எனவே, யானைகளின் இருப்பிடந்தானோ என்று
எண்ணும் வகையில் அவர் தம் ஆச்சிரமம் அமைந்திருந்தது.          56