சவரி சொன்ன செய்தி 3702. | 'ஈசனும், கமலத்தோனும், இமையவர் யாரும், எந்தை! வாசவன் தானும், ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி, "ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது; இராமற்கு ஆய பூசனை விரும்பி, எம்பால் போதுதி" என்று, போனார். |
எந்தை - எம் தந்தையே; ஈசனும் - சிவபெருமானும்; கமலத்தோனும் - தாமரை மலரில் உள்ள நான்முகனும்; இமையவர் யாரும் - தேவர்கள் எல்லாரும்; வாசவன்தானும் - அந்தத் தேவர்களின் தலைவனான இந்திரனும்; ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி - இங்கே வந்து மகிழ்ந்து என்னைப் பார்த்து; ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது - குற்றமற்ற உன் தவத்தின் முடிவான பயன் வந்துறும் காலம் நெருங்கிவிட்டது; இராமற்கு ஆய பூசனை விரும்பி - இங்கு வரவிருக்கும் இராமபிரானுக்குச் செய்ய வேண்டிய பூசையை விரும்பிச் செய்து முடித்து; எம்பால் போதுதி - அதன் பின் எம்மிடம் வந்து சேர்வாயாக; என்று போனார் - என்று சொல்லிப் போயினார்கள். தேடிப் போய் அடையப்பட வேண்டிய சிவன் முதலாயினோர் ஒற்றைக் குறிக்கோளில் உறைத்து நின்ற சவரியைத் தேடி வந்தனர்; இது இராமனையே நினைந்து நோற்ற தவத்தின் மேன்மை. 4 |