3703. | இருந்தனென், எந்தை! நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை பொருந்திட; இன்றுதான் என் புண்ணியம் பூத்தது' என்ன, அருந் தவத்து அரசிதன்னை அன்புற நோக்கி, 'எங்கள் வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மனை! வாழி' என்றார். |
எந்தை - எம் தந்தையே; நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை பொருந்திட - நீ இங்கே வருவாய் என்ற செய்தி தெரிந்தமையால்; இருந்தனென் - (உன்னை எதிர்பார்த்து) இங்கே இதுவரை இருந்தேன்; இன்று தான் என் புண்ணியம் பூத்தது - உன் வருகையால் இன்று தான் என் தவம் மலர்ச்சி பெற்றது; என்ன - என்று சவரி சொல்ல - (அதைக் கேட்ட இராமலக்குவர்); அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி - செயற்கு அரிய தவத்துறை அரசியை அன்பு பெருகப் பார்த்து; அம்மனை - தாயே; வருந்துறு எங்கள் துயரம் தீர்த்தாய் - வழிநடையால் வேதனையுற்ற எங்கள் துன்பத்தைப் போக்கினாய்; வாழி - வாழ்வாயாக; என்றார் - என்று கூறினார். திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் முதலில் சந்தித்தபோது 'அப்பரே' (பெ. பு. - திருநாவுக்கரசர் 234) என்று அழைத்ததையும், காரைக்காலம்மையாரைச் சிவபிரான் 'அம்மையே' (பெ.பு.-காண்க. 59) என்று அழைத்ததையும் ஒப்பிட்டுக் காணலாம். வாழிய என்னும் வியங்கோள் வினைமுற்று 'வாழி என விகாரமாயிற்று. 5 |